திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம் எனவே இதுபற்றி கோரிக்கை எழுந்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் விழா சிங்காரப்தோப்பு பகுதியில் உள்ள திருச்சி அமராவதி கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு முகக் கவசம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 நியாய விலைக் கடைகள் மூலம் 8 லட்சத்து
14ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் 25லட்சத்து 82ஆயிரம் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 50 லட்சம் எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் தமிழக அரசால் விலை இன்றி வழங்கப்பட உள்ளது.ஒரு வார காலத்திற்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டுவிடும் என கூறினார்.
மேலும் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம். அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அக்கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என கூறினார்.
முன்னதாக மதுரையை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி தலைநகராக அறிவிக்க கோரிக்கை எழுந்தால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்.